அன்று தீபாவளி கொண்டாட்டம் சூப்பர் ஆக முடிந்தது. நவம்பர் மாதம் 28 ஆம் நாள் 2008 இல் அம்மாவோடு நானும் எனது நண்பன் ஜார்ஜும் கொழும்புக்கு புறப்பட்டோம். கொழும்பை சென்றடைய நேரமாகும் என்பதால் காலையிலேயே ஊரிலிருந்து சென்றோம். கொழும்பை சென்றடைய மாலை 6:00 ஆகிவிட்டது. குணசிங்கபுர பஸ் தரிப்பிடத்தில் எங்களுக்காக மச்சான் காத்திருந்தார். அம்மாவுக்கு அடுத்த நாள் தான் இந்தியாவுக்கு செல்வதற்கான நேர சூசி இருந்தது. அவரை அன்ன வீட்டுக்கு அழைத்து செல்லவே அவர் வந்திருந்தார். எனவே அவரிடம் அம்மாவை விட்டு விட்டு அங்கிருந்து நானும் நண்பனும் அகன்றோம்.
இருவருக்கும் சரியான களைப்பாய் இருந்தது. அப்போது நண்பன் கூறிய யோசனை எனக்கும் சரி என பட்டது. அதாவது கொழும்பு ஆமர் வீதியிலுள்ள அவனது தங்கையின் வீட்டுக்கு சென்று இரவு போசனம் முடித்து செல்வது என்பதாகும். எனவே இருவரும் அவனுடைய மச்சானின் தொலைபேசி வழிகாட்டலின் உதவியுடன் வீட்டை சென்றடைந்தோம். நண்பனின் தங்கை அண்ணாவை கண்ட பாசத்தில் நான் ஒருவன் இருப்பதை மறந்துவிட்டார்கள். என்ன செய்வது ஒருவாறு சுதாகரித்து அன்புடன் என்னையும் வரவேற்றார்கள். பின்னர் இருவரும் நீராடிவிட்டு களைப்பாற அவர்கள் தந்த தேநீரை பருகியவுடன் இதமாக இருந்தது. சிறிது நேரத்துக்குள் கணவன் மனைவி இருவருமாக இரவு போசனம் தயார் செய்து தந்தார்கள். நண்டு, கோழி என வித விதமான கறிகளுடன் சோறும் இருந்தது. ஒரு பிடி பிடித்துவிட்டு கைகளை அலம்பும் பொது திடீரென மின்சாரம் தடைப்பட்டது. அன்று சற்று நிலவு இருந்தமையால் வெளியில் சென்றோம். அப்போதுதான்...........
கொழும்பு முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. எல்லோருடைய மனதிலும் பீதி உண்டானது. காரணம் அங்கே லேசர் ஒளி கொண்டு வான்பரப்பில் எதோ தேடுவது தெரிந்தது. ஒரு 15 நிமிடங்கள் ஓடியிருக்கும். நாங்கள் செல்வதற்கு தீர்மானித்தோம். மறுநாள் எங்களுக்கு தொழிலுக்கு செல்லவேண்டி இருந்ததால் அவர்களின் வற்புறுத்தலையும் மீறி விடைபெற்றோம். மக்கள் அனைவரும் வீதிஎங்கிலும் ஒளிந்து இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
எங்கள் மனதுக்குள் பீதி என்றாலும் பஸ் தரிப்பிடத்தை நோக்கி வேகமாக சென்றோம். அப்போது வானத்தை நோக்கி சுடும் சத்தம் கேட்டது. மக்கள் அலைமோத தொடங்கிவிட்டார்கள். என்ன செய்வதென்றறியாது நானும் நண்பனும் தங்கை வீட்டுக்கே திரும்பி ஓடினோம். அப்போது பாரிய வெடி சத்தம் கேட்டது. நாங்கள் ஓடும் திசையில் தூரத்தில் நெருப்புடன் புகை கிளம்பியது. எங்களுக்கு விஷயம் புரிந்தது. திடீரென எங்கும் மக்களோடு ஆமிகாரர்களும் சூழ்ந்துவிட்டார்கள்.
நாங்கள் தங்கையின் வீட்டை நோக்கி ஓட தொடங்கினோம். எங்களை ஒரு சிங்கள வயதான அம்மா கண்டுவிட்டு பெரிதாக கூச்சலிட ஆரம்பித்து விட்டார். "இதோ இரண்டு புதியவர்கள் ஓடுகிறார்கள்" என்று (சிங்களத்தில்). இன்னும் பயந்த நாங்கள் செல்லவேண்டிய ஒழுங்கையை விட்டு வேறு ஒழுங்கையில் ஓடினோம். இடையில் நண்பனின் மச்சானுக்கு எங்களை மீட்குமாறு தொலைபேசியில் சொல்லிக்கொண்டே ஓடும்போது பின்னால் எங்களை யாரோ துரத்தி வருவது தெரிந்ததும் நாங்கள் நின்றுவிட்டோம். ஓடி வந்தவர்கள் எங்களை பிடித்துகொண்டு விசாரிக்க ஆரபித்துவிட்டகள் சிங்களத்தில். எங்களுக்கும் சிங்களம் சரளமாக பேச தெரிந்தாலும் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் எங்களிடம் சிங்களத்தில் அதட்டி விசாரித்தது கோபத்தை மூட்டியது. அவர்களிடம் தமிழில் பேசுமாறு நாங்கள் வாதிடும்போது அந்த சிங்கள வயதான அம்மா ஆமிகாரர்களிடம் எங்களை முறையிட்டார். ஆனால் அவர்கள் ஏனோ எங்களை கவனிக்கவில்லை. அந்த நேரத்தில் நண்பனின் மச்சான் அவ்விடத்துக்கு வந்து எங்களை மீட்டதால் தப்பினோம். பின்பு தங்கையின் வீட்டில் இரவு தங்கிவிட்டு காலையில் வீட்டுக்கு வந்தோம்.
காலையில் தான் தெரிந்தது அந்த வெடிப்புச் சம்பவம் அனல் மின் நிலையத்தில் இடம்பெற்றது என்பது. அன்றைய நாள் எனது வாழ்வில் என்றும் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது.

